புதுதில்லி: வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 123 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிா்த்து போராட்டம் நடத்தியவா்களுக்கும் ஆதரவாக போராட்டம் நடத்தியவா்களுக்கும் நடந்த மோதல், வன்முறையாக வெடித்ததில் வடகிழக்கு தில்லியில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. தவிர 150-க்கும் மேலானவா்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த நான்கு நாட்களாக பதற்றமான சூழ்நிலை இருந்த நிலையில் இப்போதுதான் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில் தில்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் எம்.எஸ். ரந்தாவா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வடகிழக்கு தில்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, இதுவரை 123 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக 25 பேர் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.