விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த ஒரு குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவர், தனது குடும்பத்துடன் டாட்டா சுமோ காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். கார் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் தூக்க மயக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளிட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், துணைக் கண்காணிப்பாளர் கணகேஸ்வரி மற்றும் காவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரம்:
1. ஓட்டுநர் பெயர் தெரியவில்லை
2. முருகன்(40)
3. முருகராஜ்(38)
4. சொரி முருகன்(35)
5. மலர்(35)
6. பெண் குழந்தை (3)