மருங்காபுரி அருகே உணவகத்தில் நள்ளிரவு சமையல் எரிவாயு உருளை வெடித்து தீ விபத்து ஏற்பட்டு, அருகில் இருந்த தேநீர் கடையும் நாசமடைந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அடுத்த ஊத்துக்குளி கிராமத்தில் நள்ளிரவு பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உறங்கிக்கொண்டிருந்த கிராம மக்கள் எழுந்து பார்த்தபோது வடக்கு தெருவில் உள்ள நாகராஜ் என்பவரின் உணவகம் மளமளவென தீப்பிடித்து எரிந்துள்ளது. அருகில் இருந்த கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமான தேநீர் கடையும் தீ விபத்துக்குள்ளானது.
இதனைக்கண்ட கிராம மக்கள் அருகில் உள்ள இலுப்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் சம்பவ இத்திற்கு வருவதற்குள் அங்கிருந்த பொதுமக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கடை ஊழியர்கள் உள்ளிட்ட 5 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பின் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் உணவகத்தில் இருந்த சமையல் எரிவாயு உருளை, அடுப்பில் இருந்த தீகனுக்களால் தீப்பற்றி வெடித்தது தெரியவந்தது.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் சுப்பிரமணி என்பவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீ விபத்து குறித்து வளநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.