தாரமங்கலம் மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் ஓமலூர் பிரதான சாலையில் கோபாலகிருஷ்ணன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக மரக்கடை உள்ளிட்ட ஹார்டுவேர் பொருட்கள் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று விடியற்காலை சுமார் 3 மணியளவில் மரக்குடோனில் தீவிபத்து ஏற்பட்டது.
மரக்கடை என்பதால் தீ மளமளவென பரவி குடோன் முழுவதும் எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த ஓமலூர் மற்றும் இரும்பாலை தீயணைப்புத்துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கப் போராடினர். மேலும் சுமார் இரண்டு மணி நேரம் கழித்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தாரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சுமார் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மரம் உள்ளிட்ட ஹார்டுவேர் பொருள்கள் தீயில் எரிந்து நாசமாயின. தீயணைப்புத்துறையினர் துரித முயற்சியால் மற்ற பகுதிக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்து சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.