பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே அம்மிக் குழவியால் தாக்கி அண்ணனைக் கொன்ற தம்பி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டையை அடுத்த கீழ செம்பாளூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அமிர்தலிங்கம் (80). இவரது 3 மகன்கள் இளங்கோ (56), சண்முகவேல் (53), பாலகுமார் (49).
இவர்களில் இளங்கோ மட்டும் திருமணமானவர். மற்ற இருவருக்கும் திருமணமாகவில்லை.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு வீட்டிலிருந்த இளங்கோவிடம் சென்று பாலகுமார் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை, செலவுக்கு பணம் தருவதில்லை என குறை கூறி தகராறு செய்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பாலகுமார் அருகில் இருந்த அம்மிக் குழவியை எடுத்து வந்து இளங்கோவை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இளங்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து இளங்கோவின் மனைவி மீனாகுமாரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினர் பாலகுமாரை சனிக்கிழமை கைது செய்தனர்.