ஆந்திரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் ஆந்திரத்தில் மே 5ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதையொட்டி, தளர்வுகள் குறித்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, ஆலோசனைக்கு பிறகு கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தளர்வுகள்:
ஆந்திரத்தில் காலை 6 மணிமுதல் மாலை 5 வரை அனைத்துக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை இரவுநேர பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கிழக்கு கோத்தாவரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளதால் அந்த மாவட்டத்தில் மட்டும் கடை திறக்கும் நேரத்தை காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை குறைத்துள்ளனர்.