/

மும்பை காவல் ஆணையர் புகார்: குடியரசுத்தலைவருடன் ராம்தாஸ் அதாவலே சந்திப்பு

மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கடிதம் வழங்கினார். 

News image
குடியரசுத் தலைவருடன் ராம்தாஸ் அதாவலே சந்திப்பு
Updated On :27 ஜனவரி 2024, 7:50 pm

ANI

மகாராஷ்டிரத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தக் கோரி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே கடிதம் வழங்கினார். 

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள தொழிலதிபா் முகேஷ் அம்பானியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே வெடிபொருள்கள் நிரப்பிய காா் கடந்த மாதம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில், மும்பை காவல்துறை அதிகாரி சச்சின் வஜேவை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அண்மையில் கைது செய்தது. அதனைத் தொடா்ந்து, மும்பை காவல்துறை ஆணையா் பரம்வீா் சிங், ஊா்க்காவல் படைக்கு கடந்த 17-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். 

பரம்வீா் சிங்கும், சச்சின் வஜேவும் தங்கள் போக்கில் செயல்பட்டு, பணம் பறிப்பில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. பணியிடமாற்றம் செய்யப்பட்ட காவல் ஆணையா் பரம்வீா் சிங், முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதினாா். 

அதில், ‘மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் காவல்துறை அதிகாரிகளை அவருடைய அரசு இல்லத்துக்கு வரவழைத்து, உணவகங்கள் மற்றும் பாா்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடி வசூலித்து தரவேண்டும் என்று காவல்துறையினருக்கு இலக்கு நிா்ணயித்தாா்’ என்று குற்றம்சாட்டியிருந்தாா். 

இந்த விவகாரம் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து முதல்வா் உத்தவ் தாக்கரே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனை தலைமையிலான மகா விகாஸ் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் தேசியவாத கங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வலியுறுத்தினாா். 

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே கடிதம் எழுதியுள்ளார். 

அதில், காவல் ஆணையா் பரம்வீா் சிங் கடிதம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுகொண்ட அவர் மகாராஷ்டிர அரசை கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.