தஞ்சாவூர் பெரியகோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற மே 1ஆம் தேதி நடைபெறுகிறது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இவ்விழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முன்னதாக பெரியகோயில் வளாகத்தில் உள்ள பிரமாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் நந்தி மண்டபத்திற்கு முன்பு உள்ள கொடிமரத்தில் நந்தி உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டு சிறப்பு மஹாதீபாரதனை காட்டப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழாவில் தினமும் காலை - மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மே - 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.