மனிதர்களுக்கு சில நேரங்களில் முடிவெடுக்க தெரிவதே இல்லை. அல்லது த்ரில் என்ற பெயரிலோ அல்லது சாகஷப் பயணம் என்ற அசட்டு நம்பிக்கையிலோ எதையாவது செய்து இக்கட்டில் மாட்டிக்கொண்டு உயிரை விட்டு விடுவது வாஸ்தவமாகி வருகிறது. ஜம்மு- காஷ்மீர் ரோப் கார் விவகாரத்திலும் அப்படியே தான் நிகழ்ந்துள்ளது. விடுமுறைக்காக வடக்கு டெல்லி வாசியான அரசு ஊழியர்
ஜெயந்த் அந்த்ராஸ்கர் தன் மனைவி மனிஷா மற்றும் குழந்தைகள் அனகா மற்றூம் ஜான்வியுடன் காஷ்மீரின் குல்மார் சுற்றுலா விடுதிக்குச் சென்றுள்ளார். குல்மார் விடுதிக்கு வரும் சுற்றூலாப் பயணிகள் 100 அடி உயர ரோப் காரில் ஏறி, ஜம்மு காஷ்மீர் மலைகளைச் சூழ்ந்துள்ள இயற்கை அழகை ரசிப்பது வழக்கம். ஆனால் 1 ஆம் வகுப்பு மாணவியான அனகாவையும், பிளே ஸ்கூல் குழந்தையான ஜான்வியையும் அழைத்துக் கொண்டு 100 அடி உயர ரோப் கார் பயணத்துக்கு திட்டமிட்ட அந்தப் பெற்றோர்களை நினைத்தால் ஒரு நொடி பரிதாபமாக இருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த நால்வரும் இப்போது உயிருடன் இல்லை. அவர்களது ரோப் கார் பயணத்தின் போது கடுமையான காற்றடித்ததில் மரம் சரிந்து ரோப் கார் கம்பத்தில் விழ 100 அடி உயரத்திலிருந்து ரோப் கார் விழுந்து நொறுங்கியது. அத்துடன் அதில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் மனதை உருக்கும் வேடிக்கை என்னவெனில்; ஜெயந்த் தனது முகநூல் ஸ்டேட்டஸில் கடைசியாகப் பதிவு செய்த வாக்கியம் அவரை மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்தையுமே எல்லையற்ற அமைதியில் ஆழ்த்தி விட்டது. ரோப் காரில்ஏறுவதற்கு முன்பு ஜெயந்த் தனது முகநூல் ஸ்டேட்டஸை “Feeling peaceful" வித் மனிஷா அந்த்ராஸ்கர் என அப்டேட் செய்துள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் தற்போது அதுவே ஜெயந்தின் இறுதி முகநூல் ஸ்டேட்டஸ் என்றாகி விட்டது. இனிமேல் ஜெயந்த் மட்டுமல்ல அவரது முழுக் குடும்பத்துக்கும் எல்லையற்ற அமைதி தான். ஆனால் இச்சம்பவத்தோடு பொருத்திப் பார்க்கையில் ஜெயந்தின் முகநூல் ஸ்டேட்டஸ் அவரது நண்பர் வட்டங்களில் கண்ணீருடன் காலத்துக்கும் நினைவு கூரப்படும் ஒன்றாகி விட்டது.