கேரளாவின் வலிமை வாய்ந்த அரசியல்வாதி கே எம் மணி மறைவு!
By RKV | Published On : 10th April 2019 03:45 PM | Last Updated : 10th April 2019 03:45 PM | அ+அ அ- |

கொச்சி: கரிங்கோழக்கல் மணி அலைஸ் KM மணி நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. கேரளாவின் மிக உயரமான அதே சமயம் வலிமை நிறைந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்ட மணி, கேரள காங்கிரஸ் தலைவராக நீண்ட நெடிய அரசியல் அனுபவங்கள் கொண்டவர். வயது மூப்பின் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதலே கொச்சி தனியார் மருத்துவமனையொன்றில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை 4.57 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணித்த KM மணிக்கு மனைவியும் 6 வாரிசுகளும் உண்டு.
மறைந்த KM மணி 54 வருடங்களாக கேரள மாநிலம் 'பலா' சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக தொடர்ந்து 13 முறை தேர்தலில் வென்று எம் எல் வாகக் கோலோச்சியவர் எனும் பெருமைக்குரியவர். கேரள அமைச்சரவையில் தொடர்ந்து 11 முறை நிதியமைச்சராகவும் செயல்பட்டவர். ஒரு அரசியல்வாதியாக அனைத்துப் பெருமைகளையும் சாதித்தவரான மணி மாநில அளவில் உச்ச அதிகாரம் படைத்த பதவியாகக் கருதப்படும் ’முதல்வர்’ பதவியை மட்டும் கடைசி வரை வகித்தவரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்முறை வென்றபோதே முதல்வர் பதவிக்கு KM மணியின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட போதும் என்ன காரணத்தாலோ தன் வாழ்நாளின் இறுதி வரை முதல்வராகமலே மறைந்த வலிமை மிகுந்த கேரள அரசியல்வாதி எனும் பட்டத்துக்கு உரியவரானார் மணி. 1965 ஆம் ஆண்டிலேயே தேர்தலில் வென்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனபோதிலும் அந்த முறை சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படவே இல்லை. ஆக KM மணி முறைப்படி சட்டப்பேரவை உறுப்பினரானது வெற்றி பெற்ற இரண்டாண்டுகளின் பின்னரே. மணி 1975 ஆம் ஆண்டு அச்சுத மேனன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக அங்கம் வகித்தார். தொடர்ந்து E K நாயனார், PK வாசுதேவன் நாயர், CH முகமது கோயா, K கருணாகரன், AK அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி உள்ளிட்டோரது அமைச்சரவையிலும் நிதி அமைச்சராக அங்கம் வகித்தவர் என்ற பெருமைக்குரியவர். நிதி அமைச்சராக இதுவரை 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற சிறப்பும் மணிக்கு உண்டு.
நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் KM மணி சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்று உண்டு. அது 2014 ஆம் ஆண்டு விஸ்வரூபமெடுத்த கேரள பார் ஊழல் குற்றச்சாட்டு. கேரளாவில் இருக்கும் 400 பார்களுக்கான உரிமங்களைப் புதுப்பித்துத் தரும் வேலையில் சுமார் 1 கோடி ரூபாய் வரை ஊழல் செய்யப்பட்டதாகவும் அதில் KM மணிக்கு நேரடிப் பங்கு உண்டென்றும் கேரள உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியது. உயர்நீதிமன்றத்தின் நேரடி குற்றச்சாட்டின் பின் 2015 நவம்பரில் KM மணி தனது நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 40 ஆண்டுகளாக ஒரே கட்சிக்காகத் தான் பாடுபட்ட போதும் தன் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டபோது கட்சி தன் பக்கம் நிற்காமல் வேடிக்கை பார்த்தது என்ற மன வருத்தத்தில் சில காலம் கேரள காங்கிரஸில் இருந்து மணி விலகி நின்றார். அது குறுகிய காலம் தான். இரண்டு ஆண்டுகளின் பின் மீண்டும் தாய்வீடு திரும்பினார்.