ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

திமுகவின் பிரமேலதா, திருமாவளவன் வியூகம்!

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை திமுக கூட்டணி வடதமிழகத்தில் களம் இறக்கியிருப்பது வன்னியர் அல்லாத வாக்குகளைத் திரட்டுவதற்கான திமுகவின் உத்தியாகக் கருதப்படுகிறது.

News image

பிரமேலதா | திருமாவளவன்

சித்திரிப்பு

Updated On :30 மார்ச் 2026, 9:41 pm

தினமணி செய்திச் சேவை

பி. ஜெபலின் ஜான்

தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா, விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை திமுக கூட்டணி வடதமிழகத்தில் களம் இறக்கியிருப்பது வன்னியர் அல்லாத வாக்குகளைத் திரட்டுவதற்கான திமுகவின் உத்தியாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின் பிற பகுதிகளை விட வடதமிழகத்தில் திருத்தணி முதல் குன்னம் வரை உள்ள 64 தொகுதிகளில் சற்று மாறுபட்ட அரசியல் சூழல் காணப்படுகிறது. வன்னியர், ஆதிதிராவிடர் வாக்கு வங்கி தலா 30 சதவீதம் உள்ள இந்த தொகுதிகளில் 1952 முதல் ஜாதி அடிப்படையிலான வாக்கு திரள்வு நிலவுகிறது. வன்னியர் – வன்னியர் அல்லாதோர் என இரு துருவங்களாக வாக்கு திரளுவது வழக்கம்.

வன்னியர் அடையாளம் கொண்ட கட்சிகள் எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அதற்கு எதிராக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் திரளும் நிலையும் உள்ளது. இந்த முறை நான்கு முனைப் போட்டியால் அரசியல் களம் மாறியுள்ளது.

2019, 2021, 2024 தேர்தல்களில் விசிக வெற்றி பெற்ற பகுதிகளில் உருவான எதிர்ப்பு வாக்குகள், நடிகர் விஜய் வருகை, நாதக வளர்ச்சி ஆகிய காரணங்களால் வன்னியர் எதிர்ப்பு வாக்கு திரள்வு குறையலாம் என திமுக கருதுகிறது.

2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக–பாமக கூட்டணி இல்லாத நிலையிலும், வன்னியர் அதிகம் வாழும் விழுப்புரம், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் அதிமுக மாநில சராசரியை விட அதிக வாக்குகள் பெற்றது. தருமபுரியில் மட்டும் பாமக முன்னிலை பெற்றது.

சிதம்பரம் தொகுதியில் விசிக வெற்றி பெற்றிருந்தாலும், அதற்குட்பட்ட சில சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றது. அதேபோல், 2021-ஐ ஒப்பிடும்போது 2024-ல் சில இடங்களில் திமுக கூட்டணி பின்னடைவு கண்டது.

இந்த நிலையை சமாளிக்கவே தேமுதிகையை திமுக கூட்டணியில் இணைத்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை ஈர்க்கலாம் என திமுக நம்புகிறது.

இந்நிலையில் அதிமுக–பாமக கூட்டணி வலுவாக உள்ளதால், வடதமிழகத்தில் திமுகக்கு சவால் உள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் வாக்குகளில் சிதறல் ஏற்பட்டால் திமுகக்கு பாதிப்பு ஏற்படலாம்.

கடந்த முறை 65 தொகுதிகளில் 55 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, இந்த முறை அதே அளவு வெற்றி பெறுவது சவாலாக இருக்கலாம். இதை சமாளிக்கவே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் பிரமலதாவையும், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவனையும் களம் இறக்கியுள்ளது.

திருமாவளவனை களம் இறக்குவதன் மூலம் ஆதிதிராவிடர் வாக்கு வங்கியில் ஏற்படும் சிதறலை தடுக்க முடியும் என திமுக கணக்கிடுகிறது.

மேலும், தேமுதிக போட்டியிடும் பல தொகுதிகள் வன்னியர் ஆதிக்கம் உள்ள பகுதிகளாகும். அதேபோல் விசிக போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளும் வடதமிழகத்திலேயே உள்ளன.

இதனால் தேமுதிக மற்றும் விசிக மூலம் வன்னியர் அல்லாத வாக்குகளை ஒருங்கிணைத்து, வாக்கு வங்கியை வலுப்படுத்தும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.

மேலும் சிறுபான்மையினர் வாக்குகளும் சேரும் பட்சத்தில் வடதமிழகத்தில் வெற்றி எளிதாகும் என திமுக கருதுகிறது. ஆனால் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த வாக்கு வங்கியில் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே இறுதி முடிவை தீர்மானிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.