உலகளாவிய கரோனா நோய்த் தொற்றுப் பிரச்னை முடியும் வரையிலும் இந்தியர்களுக்கு வழங்கியுள்ள எச்1-பி மற்றும் பிற விசாக்களின் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
எச்-1பி விசா பெற்றிருப்பவர்களின் சேவைகளை முடித்துக் கொள்ளுமாறு நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான சில செய்திகளைத் தொடர்ந்து டிரம்ப் அரசிடம் இந்த வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையிலும் இதுபோன்ற எந்தவொரு ஆணையோ அறிவுறுத்தலோ அமெரிக்க அரசால் பிறப்பிக்கப்படவில்லை என்றபோதிலும் எச்-1பி விசாக்கள் பெற்றுப் பணியாற்றுவோரைத் தொடரச் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தில்லி வட்டாரங்கள் குறிப்பிட்டன.
இவ்விஷயமாக, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஸ்டீபன் பெய்கனுடன் தொலைபேசியில் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் ஸ்ரீங்கல பேசியதாகவும் தில்லியிலுள்ள உயர் நிலை அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்று சுமார் 3 லட்சம் இந்தியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றுள்ள ஓர் ஊழியரின் பணி ஒப்பந்தத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் ரத்து செய்துவிட்டால், அவர் அடுத்த 60 நாள்களுக்குள் வேறு பணியைத் தேடிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விசா அனுமதி ரத்தாகி, இந்தியா திரும்ப நேரிடும் என்பது குறிப்பிடத் தக்கது.