அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பாக இந்தியா புதிதாக விதித்துள்ள வரன்முறைகள், உலக வர்த்தக அமைப்பின் பாகுபாடின்மைக் கொள்கையை மீறுவதாகும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சில குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு எதிராக இந்தியா விதித்துள்ள கூடுதலான நிபந்தனைகள், பொதுவான தாராளமயப் போக்கிற்கும் வர்த்தக, முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிரானது என்றும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் முக்கியமாக இவை, ஜி20 நாடுகளின் தலைவர்கள், வர்த்தக அமைச்சர்களால் திட்டமிடப்பட்ட தாராள, நியாயமான, பாகுபாடற்ற, வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முதலீட்டுச் சூழல், திறந்த சந்தை ஆகியவற்றுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் அறிக்கையொன்றில் தில்லியிலுள்ள சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
புதிதாக அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளை இந்தியா திரும்பப் பெறும் என்றும் அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் ஒருமாதிரியாகக் கருதும் என்றும் தூதரகம் தெரிவித்திருக்கிறது.