அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குலசேகர நல்லூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தனியார் பஞ்சாலை நிறுவனப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருச்சுழி அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் புஷ்பம் (60). இவர் அவ்வூரருகே உள்ள ஒரு தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நேரப் பணிக்குச் செல்வதற்காக புஷ்பம் தனது ஊரில் காத்திருந்து அங்கு வந்த தனியார் பஞ்சாலை நிறுவனப் பேருந்தில் ஏறி பணிக்குச் சென்றாராம்.
அப்பேருந்து குலசேகர நல்லூரி லிருந்து சிறிது தொலைவு சென்ற நிலையில் (எல்) L வடிவச் சாலை வளைவில் திரும்பியதாம். அப்போது பேருந்தின் படிக்கட்டிற்கு நேராக உள்ளே நின்று பயணம் செய்த புஷ்பம் கைப்பிடிமானம் நழுவியதால் பேருந்திலிருந்து தவறி வெளியே விழுந்து விட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் புஷ்பத்தை மீட்டு அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி புஷ்பம் இறந்து விட்டார்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த திருச்சுழி காவல்துறையினர் விபத்து நேர்ந்த விதம் குறித்தும், விபத்து நடந்த தனியார் பஞ்சானல நிறுவனப் பேருந்தின் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.