ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் புதன்கிழமை மாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் ஜெப்ரி ரோஹித் (5) உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவன், பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
ராமநாதபுரத்தில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் சுவர் இடிந்துவிழுந்துள்ளது.
ராமநாதபுரம் நகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் ஜெப்ரி ரோஹித், இந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்துவந்தார்.
கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு இருப்பதால் வீட்டில் இருந்த சிறுவன் ஜெப்ரி ரோஹித்தும், இதே பகுதியைச் சேர்ந்த மணீஷ்குமார் (10) உள்ளிட்டோரும்
புதன்கிழமை மாலையில் எம்.எஸ்.கே. நகர் தேவாலயப் பகுதியில் உள்ள ஒரு
வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அருகே புதிதாக கட்டப்பட்டு பூசாமல் இருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
சுவர் இடிபாடுகளில் சிக்கி சிறுவர்கள் ஜெப்ரி ரோஹித், மணீஷ்குமார் மற்றும்
பிரிசில்லா (31) என்ற பெண் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அந்தப் பகுதியினர் மீட்டு ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
சிறுவன் ஜெப்ரி ரோஹித்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியில் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மணீஷ்குமார், பிரிசில்லா ஆகியோர் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.