சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்களில் வாழை இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வேளாண் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள சென்றாயனூர், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், கைகோளபாளையம், பாலிருச்சம்பாளையம், மேட்டுபாளையம், காவேரிபட்டி, சுண்ணாம்புகரட்டூர், தண்ணிதாசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கதளி, நேத்திரம் உள்ளிட்ட பல்வேறு ரக வாழைகளை சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தற்போது வாழை மரங்களில் காய்கள் காய்க்க தயாராகி வருகிறது.
இந்நிலையில், வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பழுத்து கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இப்பகுதிகளில் விவசாயிகள் ஒரு வாழைக்கன்று ரூ.10 க்கு விலை வாங்கி வந்து ஒரு ஏக்கருக்கு ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்து அம்மரங்களுக்கு நீர்ப்பாய்ச்சியும், களைகளை அகற்றியும், மரங்களுக்கு மண்களை அணைத்து பராமரிப்பு பணிகள் செய்து வந்தனர்.
வாழை மரங்கள் சாகுபடி செய்து 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மரங்களில் காய்கள் காய்க்க தயாராகி வருகின்ற சமயத்தில் வாழை இலை மஞ்சள் நிறமாக மாறி பழுத்து கருகி வருவதால் சாகுபடியில் பாதிப்பு ஏற்படுமென விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு மீதம் உள்ள மரங்களுக்கு மேலும் இந்நோய் பரவாமல் தடுக்க ஆலோசனைகளை வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.