தரங்கம்பாடி: மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் சென்ற புதுச்சேரி அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் செல்லும் புதுச்சேரி அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை பொறையாறு ராஜீவ் காந்தி சிலை அருகே சென்றது. பேருந்தில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ராஜீவ் காந்தி சிலை அருகே பேருந்து சென்றபோது பேருந்தில் மின்சாரக் கோளாறு ஏற்பட்டு பேருந்தின் முன்பக்கம் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. முன்பக்கம் புகை வருவதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது குபுகுபுவென்று தீ பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். உடனடியாக பேருந்தில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணிகள் வெளியேறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீ பிடித்து முழுவதும் எரிந்து நிலையில் புதுச்சேரி அரசு பேருந்து
காலை நேரத்தில் நடுரோட்டில் பயணிகள் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார்.