எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் மிக கனமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மிக கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது.
நாச்சியூர் பிரதான சாலையில் மழைநீர் ஆறாக ஓடிய காட்சி.
நாச்சியூர் பிரதான சாலையில் மழைநீர் ஆறாக ஓடிய காட்சி.
Published on
Updated on
2 min read



எடப்பாடி: எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மிக கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. விடிய விடிய கொட்டிய கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு ஏதுமின்றி வறட்சியான வானிலையே நிலவி வந்தது. 
இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை பகல் பொழுதில் வழக்கத்தை விட சற்றுக் கூடுதலான வெப்பநிலை நிலவி வந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை கொட்டியது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் சூழ்ந்து நின்றது. நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் நிரம்பிய நிலையில் சாலைகளில் மழை நீர் ஓடியது.

இந்நிலையில், எடப்பாடி அடுத்த நாச்சியூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கனமழையால் அங்குள்ள ஏரி நிரம்பிய நிலையில் ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் நாச்சியூர், கேட்டு கடை மற்றும் சேலம் பிரதான சாலையில் உள்ள பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்ததால் அங்கிருந்த மக்கள் வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

எடப்பாடி அடுத்த அடுத்த நாச்சியூர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்.

இதேபோல் இரவு முழுதும் கொட்டிய கன மழையால் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றி உள்ள குடியிருப்புகளில் மழை நீர் சூழ்ந்து குளம் போல் தேங்கியது. 

எடப்பாடி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை தொடர்ந்து பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் அன்றாட பணிகள் பாதிப்புக்கு உள்ளாகியது. குறிப்பாக உழவர் சந்தை,ராஜாஜி காய்கறி மார்க்கெட், நகராட்சி தினசரி அங்காடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் நடைபெறும் காய்கறி பழங்கள் விற்பனை பாதிப்பிற்கு உள்ளானது. 

மேலும் அதிகாலை நேரத்தில் பெய்த மழையால்  பால் மற்றும் செய்தித்தாள் வினியோகம் மழையால் பாதிப்பிற்கு உள்ளானது. நகர்ப்புற பகுதியில் 95 மி.மீட்டர் மழை பதிவான நிலையில் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இதை விட கூடுதலான அளவு மழைப்பொழிவு இருந்ததாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com