ஆம்பூர் அருகே வனத்துறை குடியிருப்பு பகுதியை உடனடியாக புனரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆம்பூர் அருகே மிட்டாளம் கிராமத்தில் வனத்துறை குடியிருப்பு கட்டடம் உள்ளது. ஆம்பூர் வனச்சரகத்தில் உள்ள மிட்டாளம் ஊராட்சி துருகம் காப்புக்காடுக்களின் வன பிரிவில் பணிபுரியும் வனவர், வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்களுக்கான குடியிருப்புகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கட்டப்பட்டது. அலுவலக அறை, சமையல் அறை வசதி, கழிப்பிட வசதிகளுடன் இந்த கட்டிடம் இயங்கிவந்தது. இந்த கட்டிடத்தை ஒட்டியே கிராம வனக்குழு அலுவலகமும் அமைந்துள்ளது.
மிட்டாளம் கிராமத்தில் சிதைந்து கிடக்கும் வனத்துறை குடியிருப்பு கட்டடம்.
இந்தப் பகுதி காப்புக்காடுகளை பார்வையிட வரும், வனத்துறை உயர் அதிகாரிகள் அலுவல்களை கவனிக்கவும், காப்புக் காடுகள் மகசூல் ஏலம் மற்றும் டெண்டர் பணிகளை கவனிக்கவும் இந்த வனத்துறை குடியிருப்பு கட்டடம் இதுநாள் பயன்பட்டு வந்தது.
இதையும் படிக்க | எச்ஏஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
இந்தக் கட்டடம் கொஞ்சம் கொஞ்சம் சேதம் அடைந்து வந்த நிலையில், இப்பகுதியில் பணியாற்றி வந்த வனத்துறையினர் இந்த குடியிருப்பு கட்டடத்தை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக , இந்த வனத்துறை குடியிருப்பு சிதைந்து வந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வந்த கன மழையால் இப்போது முற்றிலும் சிதைந்து சேதமானது.
சிதைந்து கிடக்கும் வனத்துறை குடியிருப்பு கட்டடத்தை பார்வையிடும் மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் மகாதேவன்
வனத்துறையில் இந்தப் பகுதியில் பணிபுரியும் வனவர் , வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர்கள் பல்வேறு பகுதிகளில் இப்போது வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, பணியாற்றி வருகின்றனர்.
முற்றிலும் சேதம் அடைந்த வனத்துறை குடியிருப்பு பகுதி.
இது குறித்து இப்பகுதி மக்கள் வனத்துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இன்று இந்த வனத்துறை குடியிருப்பு பகுதியை பார்வையிட்டு, ஆய்வு செய்த மாதனூர் ஒன்றிய குழு உறுப்பினர் மகாதேவன், உடனடியாக இந்த வனத்துறை குடியிருப்பை புனரமைக்க வேண்டும் என வனத்துறை அலுவலர்களிடம் வலியுறுத்தப் போவதாக கூறினார்.