மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக பணியாற்றி வந்த எல்.முருகனுக்கு புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை மாற்றத்தில் மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அவர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்த அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தை சேர்த்த அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது பதவியை ராஜிநாமா செய்தபின் தமிழக பாஜகவில் இணைந்தார்.
தற்போது தமிழ்நாடு பாஜகவின் துணைத்தலைவராக உள்ள அண்ணாமலை 10 ஆண்டுகளாக இந்திய காவல் பணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.