/

நீட் தேர்வுக்கு பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:42 am

DIN

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம்  தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட்  6 ஆம் தேதி கடைசி நாளாகும். இதனால் நீட் எழுத விரும்பும் மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் ஆர்வமுடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின்  தலைமை ஆசிரியர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒருங்கிணைத்து பள்ளியின் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிறுத்தப்பட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பத்தில் சில மாணவர்கள் தவறு செய்வதால், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் பெற்றோர்கள் உதவி இல்லாமல் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நிலை இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களின் ஒரு தேர்வு விண்ணப்பம் கூட ரத்தாகி விடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தவறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இந்த அறிவுறுத்தலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.