ஜெய்பீம் ’செங்கேணி’ பார்வதி அம்மாவுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி
ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.
சமீபத்தில் வெளியாகிய ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு தரப்பினரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற்றுள்ளது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியாகிய இந்தத் திரைப்படம் வெளியானதிலிருந்து பல்வேறு விவாதங்களையும், அதனைத் தொடர்ந்து இருளர் மற்றும் பழங்குடி மக்கள் மீதான கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவை பாராட்டி எழுதிய கடிதத்தில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவுக்கு உதவிடக் கோரியிருந்தார்,
அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா பார்வதி அம்மாவிற்கு உதவும் விதமாக ரூ.10 லட்சம் வங்கி வைப்பு நிதியாக வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது
அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சென்னையில் ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவை நேரில் சந்தித்து ரூ.15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் சூர்யா வழங்கினார்.
இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.