விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 85 வயதைக் கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 85 வயதைக் கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகளில் விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 16,78,,551 வாக்காளர்கள் உள்ள நிலையில், இவர்களில் 4,092 பேர் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் டி.எஸ்.ஆர். நகரில் 85 வயதைக் கடந்த முதியோர் ஒருவர் வீட்டிலேயே தபால் வாக்கை செலுத்தும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
இதற்காக தபால் வாக்குப் பெட்டி போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, தபால் வாக்குப் பெறப்பட்டது.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 501 பேர் தபால் வாக்கு செலுத்த உள்ளனர். சனிக்கிழமை வரை (ஏப்.6) முதல் கட்டமாக தபால் வாக்குகள் பெறப்படும். இதில் விடுபட்டவர்களிடம் திங்கள்கிழமை பெறப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.
நிகழ்வில் விழுப்புரம் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் ரமேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.