புது தில்லி: சிறையை விட களங்கம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் என்று, சிறுமி பலாத்கார வழக்கில், ஒருவருக்கு பிறப்பித்த 5 ஆண்டுகால சிறைத் தண்டனை ரத்து செய்த தில்லி நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்று தவறாக அடையாளம் காட்டப்படும் நபர், இந்த சமுதாயத்தில் களங்கத்துடன் வாழ்வது சிறைத் தண்டனையை விட வேதனையானது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நீதிமன்றம், கடந்த 2023ஆம் ஆண்டு சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று அளித்த தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசு தரப்பு சாட்சிகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட நபர் அளித்த சாட்சியில் நம்பகத்தன்மை இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் சாட்சியம் நம்பகத்தன்மையற்றதாகவும் வழக்கு விசாரணையில் கடுமையான குறைபாடுகள் மற்றும் இடைவெளிகள் இருப்பதால், விசாரணை நீதிமன்றத்தால் எடுக்கப்பட்ட போக்சோ சட்டப் பிரிவு 29 மற்றும் 30-ன் கீழ் குற்றம் நடந்ததாகக் கருதுவது, மேல்முறையீட்டாளரை தண்டிக்க ஒரு அடிப்படையாக இருக்க முடியாது" என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
ஒரு தவறான தண்டனை, ஒரு தவறான விடுதலையை விட மோசமானது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.
சிறுமியை பலாத்காரம் செய்தவர் என்ற களங்கத்துடன் தொடர்ந்து இந்த சமூகத்தில் அவமானத்தை சந்திக்கிறார், இது கடும் விசாரணை மற்றும் கடுங்காவல் தண்டனையை விட வேதனையானது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வழக்கானது, கடந்த 2016ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியை, அவரது வீட்டில், உறவினர் பலாத்காரம் செய்துவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளிக்க, தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் கவனித்துள்ளது. அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா மற்றும் மாமிக்கு (மேல்முறையீட்டாளரின் சகோதரி) இடையேயான திருமண தகராறு காரணமாக முக்கியத்துவம் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளது.