திருச்சி மாவட்டம் அழகிரிபுரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களின் கைரேகை அழிந்துபோயிருப்பதால் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து மாவட்ட பொது வழங்கல் துறை அதிகாரி ஒரு தீர்வைக் கொடுத்துள்ளார்.
மாவட்ட பொது வழங்கல் துறை அதிகாரி கே. மீனாட்சி, திங்கள்கிழமை அதிகாரிகளுக்கு ஒரு அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். அதில், அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஅட்டைதாரர்கள், சலவைத் தொழிலாளர்களாக இருந்து விரல் ரேகை அழிந்திருந்தால், ஸ்ரீரங்கம் தாலுகா வழங்கல் துறை அதிகாரியின் ஒப்புதல் பெற்று அவர்களுக்கு கைரேகைப் பதிவு முறை இல்லாமல் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சலவைத் தொழிலாளர்கள் நாள்தோறும் ரசயானம் நிறைந்த சோப்புகளைக் கொண்டு துணிகளை அலசுவதால் அவர்களது கைரேகை தேய்ந்து, நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க முடியாமல் அவதிப்படுவதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியைத் தொடர்ந்து மாவட்ட பொதுவழங்கல் துறை அதிகாரிகள் அதற்கு தீர்வு அளித்துள்ளார்.
ஒருவேளை, அவர்களது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்தப் பிரச்னை இருந்தால், கைரேகை பதிந்து, நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்குவதற்கு மாற்று வழியை பின்பற்றலாம். அல்லது, வீட்டில் இருக்கும் பிள்ளைகளின் கைவிரல் ரேகைகளை வைத்தும் பொருள்கள் வாங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நியாயவிலைக் கடை பணியாளர்கள், இதுபோன்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
குறிப்பாக, கண் கருவிழி ஸ்கேனிங் முறையில் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் தற்போது சோதனை முறையில் 70 கடைகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டம் அனைத்துக் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டால் சலவைத் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், கைவிரல் ரேகை தேயும் வகையிலான பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சிக்கல்களும் தீரும் என எதிர்பார்க்ப்படுகிறது.