மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
56.26 லட்சம் வாக்காளர்கள் இந்த மூன்று தொகுதிகளிலும் வாக்களித்து வருகிறார்கள்.
மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில், பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பரஸ்பரம் தங்களது தொண்டர்களை தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
கூச் பெஹார், சந்தமாரி பகுதியில், தங்கள் வாக்குச்சாவடி நிர்வாகி மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கல்வீசித் தாக்கியதில் அவர் காயமடைந்ததாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
அது மட்டுமல்லாமல், வாக்குச்சாவடி முகவர் பிஸ்வநாத் பால், திரிணமூல் கட்சியினரால் கடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து. தங்களது நிர்வாகிகளை வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீது பாஜக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதுபோல, பாஜகவினர், தங்கள் கட்சியினரைத் தாக்கியிருப்பதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறிய நிலையில், பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.