மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா கே.சென்னம்பட்டி கிராம பகுதியில் கேரளாவைச் சேர்ந்த தனியார் உரத்தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இறைச்சி கழிவுகளை சுத்திகரித்து உரமாக மாற்றும் பணி நடைபெறுகிறது.
இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபடுவதாக ஆறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த வாரம் தேர்தலை புறக்கணித்த நிலையில், மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக அறிக்கை கேட்டிருந்தார்.
அதற்கு பதில் அளித்த மாசு கட்டுப்பாட்டு வாரியம், சம்மந்தப்பட்ட தொழிற்சாலை சட்ட விதிகளுக்கு உள்பட்டு நடைபெறுவதாக தெரிவித்திருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட ஒரு தொழிற்சாலையை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் துணைத் தலைவரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் புதன்கிழமை சென்னம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
இந்த உரத் தொழிற்சாலை விவகாரமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தேன். இந்த உர தொழிற்சாலை நிரந்தரமாக அகற்றுவதற்காக பொதுமக்களுடன் சேர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு செவி சாய்க்கவில்லை என்றால் இந்த போராட்டம் தீவிரமடையும்.
செவரக்கோட்டையில் திமுக அரசு தொடங்கிய தொழிற்பேட்டை மக்களுக்கு விரோதமானது. நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து அந்தத் திட்டத்தை நிறுத்தினோம்.
அதேபோல, தற்போது இந்த உர தொழிற்சாலை அகற்றவும் போராட்டத்தை எடுத்துள்ளோம். இதனால் பாதிப்பு இல்லை என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தெரிவித்துள்ளது. பாதிப்பு இல்லை என்றால் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் வைப்பதால் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
இந்த தொழிற்சாலையால் மக்களுக்கு வேலை வாய்ப்போ, பொருளாதார வளர்ச்சியோ எந்த வித பயனும் இல்லை. கழிவுகளை கொட்டுவதற்கு இந்த இடத்தை தேர்வு செய்தல் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இது முற்றிலும் விவசாயம் செய்யும் நிலமாகும்.
மதுரை மாவட்ட ஆட்சியர்தான் இதற்கு பொறுப்பு, அவரிடம் மனு அளித்துள்ளேன். அவர்தான் சம்பந்தப்பட்ட துறைக்கும் அந்த அமைச்சருக்கும் இந்த பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கள்ளிக்குடி போலீசார் நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.