
ராமநாதபுரம்: இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராமேசுவரம் மீனவர் ஒருவர் பலியானார், 2 பேர் காயமடைந்தனர். மேலும் மாயமான 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 397 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இதில் கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததுடன்,ராமேசுவரம் மீனவர் கார்த்திகேயனுக்குச் சொந்தமான விசைப்படகுகள் மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியது. இதில் விசைபடகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. படகில் இருந்த ராமேசுவரத்தை சேர்ந்த மூக்கையன், மலைசாமி, ராமச்சந்திரன் மற்றும் முத்து முனியாண்டி ஆகியோர் கடலில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு படகு உரிமையாளர் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீன்பிடி படகு முழுமையாக சேதமடைந்ததாகவும், படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 2 பேர் புங்குடுதீவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காணாமல் போன 2 மீனவர்களை தேடும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.