
புதுக்கோட்டை: புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல் கேட்டு அமலாக்கத் துறை தாக்கல் செய்திருந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளார்.
இவர் அமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்தை விட அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக 2021 அக்டோபரில் புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் சொத்துக் குவிப்பு வழக்கின் ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் எனக் கோரி சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறையினர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை வந்தது. விஜயபாஸ்கர் தரப்பு வழக்குரைஞர்கள், அமலாக்கத் துறை தரப்பு வழக்குரைஞர் மற்றும் ஊழல் தடுப்பு போலீஸார் சார்பில் அரசு வழக்குரைஞர் ஹேமந்த் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, ஆணங்களின் நகல் கோரும் அமலாக்கத் துறையின் மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி. சுபத்ராதேவி தள்ளுபடி செய்தார்.
இந்த மனு, சிஆர்பி 210ன்கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தவறு என்றும், சிஆர்பி 237ன் படி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
எந்த அடிப்படையில் என்னென்ன ஆவணங்களின் நகல் வேண்டும் என்று விரிவாக மனுவில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.
மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி. சுபத்ராதேவி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.