
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்டை ஏவுவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய விண்வெளி மையத்தின் ‘ப்ரோபா 3’ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் நாளை (டிச. 4) விண்ணில் ஏவப்படுகிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 4.08 மணிக்கு ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.
பாா்வையாளா்கள் இதை நேரில் காண்பதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: திரைப்பட விமர்சனங்களைத் தடை செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட்
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) கீழ் செயல்படும் ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இதுவரை 430-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை நியூ ஸ்பேஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பெரும்பாலான உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலையில், அண்மையில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி, ‘ப்ரோபா-3’ எனப்படும் இஎஸ்ஏ நிறுவனத்தின் இரு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புவியிலிருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தி சூரியனின் புற வெளிக் கதிர்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இரு செயற்கைக்கோள்களும் 150 மீட்டா் தொலைவில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளியைச் சுற்றி ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தரவுகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.