சென்னை: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி அதன் முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் 20.86 சதுர கி.மீ பரப்பளவில் புழல் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20 அடியாகும்.
இதன் முழுக்கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். வெள்ளிக்கிழமை (டிச.13) காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 19.69 அடியாகவும், கொள்ளளவு 2950 மில்லியன் கனஅடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 2281 கன அடியாகவும் உள்ளது.
ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புழல் ஏரியின் மீகைநீர் கால்வாயின் வெள்ள தணிப்புக்காக ஏரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, புழல் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல், வடபெரும்பாக்கம்,
மஞ்சம்பாக்கம், கொசப்பூர், மணலி மற்றும் சடையான்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாயின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.