ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் என்று பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
பார்படாஸில் வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளதாக நீண்ட நாள்களாக தகவல்கள் வெளியாகின.
அதேபோல், நீண்ட நாள்களாக மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்தனர்.
மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு அளித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும், அவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் எனவும் ஜெய் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும், செளராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மாற்ற விழாவில் பேசிய ஜெய் ஷா, “விராட் கோலியின் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் சொந்த பிரச்னைக்காக முதல்முறையாக விடுப்பு கேட்டது அவரது உரிமை. தேவையில்லாமல் விடுமுறை எடுப்பவர் அல்ல விராட்.” எனத் தெரிவித்தார்.