போபால்: காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சுமார் 6 பேர் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் முகாமிட்டுள்ளனா்.
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாராவில் இருந்து ஒன்பது முறை எம்.பி.யாகவும், தற்போது எம்.எல்.ஏவாகவும் உள்ள கமல்நாத், கடந்த நவம்பரில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் மோசமான செயல்பாட்டினைத் தொடர்ந்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாா். இதனால் அவா் அதிருப்தியடைந்த அவா் பாஜகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில், சனிக்கிழமை தில்லி வந்த கமல்நாத், பாஜகவில் இணைவதாக இருந்தால் தகவல் தெரிவிப்பேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில், கமல்நாத் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சுமார் 6 பேர் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் முகாமிட்டுள்ளனா்.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத்துக்கு ஆதரவான 6 எம்எல்ஏக்கள், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு உள்ள ஒரே எம்.பி.யும், அவரது மகனுமான நகுல் நாத் உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு வந்து முகாமிட்டுள்ளனா். மேலும் 23 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற கமல்நாத் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த அணியில் இணைவதற்காக தில்லி வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக முன்னாள் எம்.பி.யும், அமைச்சரும் கமல்நாத் ஆதரவாளருமான தீபக் சக்ஸேனா சிந்த்வாராவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டப்பேரவைத் தோல்வியைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் நீக்கப்பட்ட விதம் அவருக்கு மன வேதனையை ஏற்படுத்தியது.
"தலைவருக்கு எல்லா மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவர் எந்த முடிவை எடுத்தாலும் நாங்கள் அவருடன் இருப்போம்" என்று சக்ஸேனா கூறினார்.
மற்றொரு ஆதரவாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான விக்ரம் வா்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனப் பதிவிட்டுள்ளாா்.
"காமல்நாத் முடிவை நான் பின்பற்றுவேன்" என்று வர்மா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
230 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு இப்போது 66 எம்எல்ஏக்கள் உள்ளனா்.இவா்களில் 23 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற கமல்நாத் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இந்த அணியில் இணைவாா்கள் என்று தெரிகிறது.
"மூன்றில் ஒரு பங்கு எம்எல்ஏக்கள் கமல்நாத் அணியில் இணைந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டம் பொருந்தாது" என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ராகேஷ் பாண்டே தெரிவித்தார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் அவரது ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பலர் பாஜகவில் இணைந்தனா். இதனால், அப்போது முதல்வராக இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.
தற்போது, மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் உடைந்தால் அது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.