
வயநாடு (கேரளம்): வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களின் தரவுகளைச் சேகரிக்கும் பணியில் மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக, மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை குழந்தைகள், பெண்கள் உள்பட 153 ஆக உயர்ந்துள்ளதாக புதன்கிழமை காலை தெரிவித்துள்ள கேரள சுகாதாரத் துறை, இதுவரை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளதை இரண்டாவது நாளாக மோசமான வானிலைக்கு இடையே ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா் உள்ளிட்ட பல்வேறு முகமைகள் முழுவீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனிடையே காணாமல் போனவர்களின் தரவுகளைச் சேகரிக்க மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை தொடங்கியுள்ளனர்.
மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையத்தின் சிறப்புக் குழு, அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை, நிலச்சரிவுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளைச் சேகரிக்கரித்து வருகிறது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை அதிகாலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
குடும்ப அட்டை விவரங்கள் மற்றும் பிற அரசு ஆவணங்களை மதிப்பாய்வு செய்வதன் மூலம் தனிநபர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரி கூறினார்.
பல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
முடிந்தவரை பல உயிர்களைக் காப்பாற்றவும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கவும், மற்றவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது.
வயநாட்டில் 45 நிவாரண முகாம்களில் 3,069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்துள்ளன, 180 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை கண்டறியும் பணியில் பல்வேறு மீட்பு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிகாலை முதல் தங்களது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
செவ்வாய்கிழமை அதிகாலை பெய்த மழையினால் அதிகாலை 2 மணியளவில் முதல் நிலச்சரிவும், அதைத் தொடர்ந்து 4 மணியளவில் அடுத்த நிலச்சரிவும் ஏற்பட்டது.இதில் அழகிய குக்கிராமங்களான முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை மற்றும் நூல்புழா ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் இறந்தனர்.
மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த பேரழில் சிக்கி இறந்தோரில் 93 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. அண்டை மாவட்டமான மலப்புரத்தில் பாயும் சாலியாறில் இருந்து 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 18 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வட கேரளத்தில் உள்ள மலை மாவட்டமான வயநாடு, பசுமையான காடுகள், மலைகள் மற்றும் மின்னும் நீர்வீழ்ச்சிகளுக்கும் பெயர் பெற்றது.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சுமார் 8,17,000 மக்கள்தொகை கொண்ட பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு கலாச்சாரங்களின் தாயகம் வயநாடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.