

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 28) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 525 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷபாலி வெர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார். அவர் 197 பந்துகளில் 205 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 23 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 26 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன்பின் களமிறங்கிய சுபா சதீஷ் 15 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் டெல்மி டக்கர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.