அபுதாபி: ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 145-க்கும் பேர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் க்ரோகஸ் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள பிரம்மாண்ட கச்சேரி அரங்கிற்குள் வெள்ளிக்கிழமை இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கு நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டனர். மேலும் அரங்குக்குள் வெடிகுண்டுகளையும் வீசிச் சென்றதால் அந்த பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 145-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மாஸ்கோவில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலகத் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரபு அமீரகம் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மாஸ்கோவில் அப்பாவி மக்கள் மீதான கொடூரத்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமைதிக்கும் மனிதநேயத்தும் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச சட்டத்திற்கு முரணாக பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குறைக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் அனைத்து வகையான வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை நிரந்தரமாக முறியடிக்கப்பட வேண்டும்.
இந்த துயரமான நேரத்தில் ரஷிய அரசு மற்றும் மக்களுக்கும், இந்த கொடூரமான தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.