தேர்தல் விவரங்களை வெளியிட காலதாமதமானதால் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள மாநிலங்களவை எம்.பி கபில் சிபல், முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்த 11 நாள்களுக்குப் பின் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் பதிவேற்றியதன் காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் ஒவ்வொரு குடிமகனும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் நம்பத்தகுந்ததாக உள்ளதா?
முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்தபின் அதற்கான தரவுகள் 11 நாள்களுக்கு பின்னரே தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அதிலும், வாக்கு எண்ணிக்கை இல்லாமல், சதவீதம் மட்டுமே காட்டப்படுகிறது. இதற்கான காரணமும் தெரியவில்லை. இதுகுறித்த விளக்கத்தைத் தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி தெளிவுபடுத்தவேண்டும்.
இதற்கு முன்பிருந்த தேர்தல் ஆணையர்கள் வாக்குப்பதிவு முடிந்த அன்றோ, அல்லது மறுநாளிலோ அதுகுறித்தத் தரவுகளை பதிவேற்றம் செய்து விடுவார்கள். இந்த முறை காலதாமதம் ஆகியிருப்பது மக்களிடையே தேர்தல் ஆணையத்தின் மீது நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.
மேலும், சென்ற வாரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை, விவிபேட் இயந்திர ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் எண்ணக் கோரிய அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அத்துடன், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் அடங்கிய அமர்வு, காகித முறையில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தது.
இதற்கு முன்னர், ஆம் ஆத்மியின் சௌரவ் பரத்வாஜ் பேசுகையில், “இப்போது மத்திய அரசு விவிபேட் இயந்திர ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று சொல்லியிருந்தால் தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்திருக்கும். ஆனால், பிரச்னை என்னவெனில், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் செல்கையில் தேர்தல் ஆணையமும், ஆளும் பாஜக அரசும் இதனை எதிர்க்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.