வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி
நாமக்கல்: திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பெண் தலைமைக் காவலர் அமுதா(47)சாலை விபத்தில் பலியானார்.
ராசிபுரம் அருகே உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அமுதா(47).இவர் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பணிக்கு சென்றவர் இரவு 10.30 மணிக்கு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, திருச்செங்கோடு - ராசிபுரம் சாலை கல்லுப்பாளையம் பிரிவு சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்து வந்த லாரி தலைமைக் காவலர் அமுதாவின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.