மின் கட்டணத்தை உயர்த்தக்கூடாது? - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.
பாமக நிறுவனர் ச.ராமதாஸ்
பாமக நிறுவனர் ச.ராமதாஸ்

விழுப்புரம்: தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது

தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் மின்சார வரியத்தின் முயற்சி கண்டிக்கதக்கது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஆண்டுதோறும் ஜூலையில் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். கடந்த ஆண்டு பாமக கடுமையாக எதிர்த்ததால் வீடுகளை தவிர வணிக நிறுவனங்களுக்கு மட்டும் உயர்த்தப்பட்டது.

ரூ.311,500 கோடிக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இவ்வளவு உயர்த்தியும் மின்வாரிய நஷ்டம் குறையவில்லை. மின்வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத்தான் தடுக்க வேண்டும்.மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கையை கைவிடவேண்டும். தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட 10 சதவீத பணிகள் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளை பெற ரூ.500 முதல் ரூ. 10 ஆயிரம் வரை கையூட்டு கொடுக்கவேண்டியுள்ளது. கையூட்டு கொடுத்தால் சேவை கிடைப்பது அவமானமாகும். பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால் சேவைக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

பாமக நிறுவனர் ச.ராமதாஸ்
சிறுமி பாலியல் புகாரில் ரேபிடோ ஓட்டுநர் கைது!

இந்த சட்டம் கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக முதல்வர்கள் ஒவ்வொருவரும் சாதனை படைத்து வரலாற்றில் இடம் பிடித்தார்கள். ராஜாஜி சென்னை மாகாணத்தில் மது விலக்கை அறிமுகம் செய்தார். அதனை ஓமந்தூரார் சென்னை மாகாணம் முழுவதும் விரிவுபடுத்தினார். காமராஜர் பாசன திட்டங்களையும், அண்ணா மும்மொழி திட்டத்தை ரத்து செய்து, சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றினார். கலைஞர் 3 வகையான இட ஒதுக்கீட்டையும், எம். ஜி.ஆர் சத்துணவு திட்டத்தையும், ஜெயலலிதா தொட்டில் குழந்தை திட்டத்தையும்.69 சதவீத இட ஒதுக்கீட்டை 9-ஆவது அட்டவணையில் கொண்டு வந்தார். முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எந்தவித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதல்வர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை.பாமகவிற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களிடம் 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம் அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

காமராஜர் காலத்தில் தான் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் திமுக, அதிமுக ஆட்சியில் அணைகள் எதுவும் கட்டப்படவில்லை. திமுக ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டி.எம்.சி கொள்ளளவுகூட இல்லை.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ. 500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ. 2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான். முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வரும் 28-ஆம் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

விழுப்புரம் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மிதக்க காரணம் அது பூந்தோட்டம் ஏரியில் கட்டப்பட்டது. இது போலவே திண்டிவனம் பேருந்து நிலையம் ஏரியில் கட்டப்படுவதை கைவிட வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து நாள்களிலும் புறநோயாளிகள் பிரிவு செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் கொலை கொள்ளைகள் அதிகம் நடைபெறுவதை தடுக்க காவல்துறை விழிப்புடன் இருக்கவேண்டும். இதற்கான திட்டங்களை காவல்துறை அதிகாரிகள் கேட்டால் நாங்கள் சொல்ல தயாராக உள்ளோம். முல்லைப் பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன்.முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை என்று ராமதாஸ் கூறினார்.

அப்போது கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com