சென்னையில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

சென்னையில் 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!

பிராட்வே பேருந்து நிலையம் எதிரேயுள்ள கட்டடம் இடிந்து விழுந்தது.
Published on

சென்னை பாரிமுனையில் பிராட்வே பேருந்து நிலையம் எதிரே உள்ள 60 ஆண்டுகள் பழமையான சென்னை மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் விடுதி கட்டடம் விழுந்தது.

இந்த விடுதியை கடந்த 1959-ம் ஆண்டு ஜூலை 18-ந் தேதி காமராஜர் திறந்து வைத்தார். மொத்தம் 342 அறைகள் கொண்ட இந்த விடுதியில் 430 பேர் தங்கும் வகையில் இடவசதி உள்ளது.

இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு ஒரு அரசாணையை வெளியிட்டது. அதில், 4.24 ஏக்கர் கொண்ட இந்த இடத்தில் நீதித்துறைக்கு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்ட உத்தரவிடப்பட்டது.

அதன் பின்னர் அங்கிருந்து மாணவர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, செயல்படாத கட்டடமாக இருந்து வந்த நிலையில் திடீரென அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், இடிபாடுகள் எதிரே உள்ள நாராயணப்ப தெருவில் சிதறி விழுந்தன.

பிராட்வே பேருந்து நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்ததால் அவ்வழியாக சென்ற 3 பேருக்கு (விஸ்வநாதன், சொக்கலிங்கம், சுப்பிரமணியன்) காயம் ஏற்பட்டது.

அதில் அவ்வழியாக நடந்த சென்ற தி.நகரைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சொக்கலிங்கம் என்பவருக்கு இடது காலிலும் , விஸ்வநாதனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டதாகவும் மூவருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட சேகர் பாபு , இடிபாடுகளை உடனடியாக இடித்து அகற்ற அறிவுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com