ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்: அமைச்சர் எஸ்.ரகுபதி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது

News image

சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி

Updated On :20 நவம்பர் 2024, 2:54 pm IST

புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல் நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் புதன்கிழமை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில்,வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். மேலும், தமிழக காவல்துறையும் சிபிசிஐடியும் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில்,கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, விசாரணையை மேலும் காலதாமதப்படுத்தும், துரிதமான பலன் கிடைக்காது என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் சம்பவத்தில்,முதல்வர் உத்தரவின்பேரில் 3 அமைச்சர்கள் அங்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளைத் தீவிரப்படுத்தினோம். சிபிசிஐடி போலீஸார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க முடியாது.

அதேநேரத்தில், வேறு எந்த அரசும் எடுத்திருக்காத நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுத்தது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நிர்வாக சீர்குலைவை ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் பாராட்டும் காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை இருக்கிறது. உரிய நடவடிக்கை, படிப்படியாக உரிய காலத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு எங்களை ஆலோசிக்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது பற்றி உரிய முடிவை எடுப்பார்.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்கப்படும் என்பதால், காலதாமதம் ஏற்படும். துரிதமான பலன் கிடைக்காது. இந்த உத்தரவால் தமிழ்நாடு அரசுக்கோ, திமுகவுக்கோ எந்தப் பின்னடைவும் இல்லை. அந்தப் பகுதி மக்கள், அரசின் நடவடிக்கையால் திருப்தி அடைந்திருக்கிறார்கள் என்றார் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.