
பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து கடுமையாக குறைந்ததையடுத்து கடந்த ஜூலை மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாதத்தில் வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து விலையும் குறைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 30 வரை விற்பனையானது.
இந்த நிலலையில் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் வெளிச் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளிரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்பனையானது. சில்லறை விற்பனையிலும் ஒரு கிலோ தக்காளி ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் தக்காளி விலையேற்றத்தால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருக்க பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் பண்ணை பசுமை நுகா்வோா் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப தமிழ்நாட்டிலுள்ள பிற பகுதிகளிலும் தக்காளி, வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குறுகிய காலத்துக்குள் தக்காளி, வெங்காய விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டுமே வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசியத் தலைநகாில் தக்காளி விலை ரூ. 100-க்கும் மேல் விற்பனையான நிலையில், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும் முயற்சியில் மத்திய நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் என்.சி.சி.எஃப். மூலம் தக்காளியை விற்க நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து தக்காளி கிலோ ரூ .65-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சந்தையில் விலையைக் குறைக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தக்காளி விலையின் பாதிப்பிலிருந்து நுகா்வோரைப் பாதுகாப்பதற்கும், இடைத்தரகா்களின் ஆதாயங்களைத் தடுப்பதற்கும் இந்தத் தலையீடு மேற்கொள்ளப்படுகிறது.