
கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வியாழக்கிழமை மாலை திடீர் சோதனையில் மேற்கொண்டதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக நான்சி நித்யா கரோலின் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், பத்திரப் பதிவிற்காக சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்பினரிடம் பத்திர எழுத்தர்கள் மூலம் லஞ்சம் வசூலித்து வருவதாக கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் பரிமளா தலைமையிலான போலீசார் வியாழக்கிழமை மாலை 5:30 மணி அளவில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சார் பதிவாளர் அலுவலகத்தின் வாயில் கதவுகளை பூட்டிய போலீசார் அலுவலக வளாகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சார் பதிவாளர் அலுவலக ஊழியர் கீர்த்தியிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.