மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் போட்டியின் நடுவே மயங்கி விழுந்த நைஜீரிய குத்துச்சண்டை வீரர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த முன்னாள் தேசிய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க குத்துச்சண்டை சாம்பியனான கேப்ரியல் ஒலுவாசெகுன் ஒலன்ரெவாஜு (வயது 32), கடந்த மார்ச் 29 அன்று கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அக்ராவிலுள்ள புக்கோம் பாக்ஸிங் அரேனாவில் கானா நாட்டு வீரரான ஜான் எம்பனுகு என்பவருக்கு எதிரான போட்டியின் மூன்றாம் சுற்றில் கேப்ரியல் திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர், உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கொர்லே-பூ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சுமார் 30 நிமிட தீவிர சிகிச்சைக்குப் பின் கேப்ரியல் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், அவரது மரணத்திற்கு நைஜீரிய குத்துச்சண்டை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நைஜீரிய குத்துச்சண்டை வாரியத்தின் பொதுச்செயலாளர் ரெமி அபோடெரின் கூறுகையில், பயமற்ற வீரரான கேப்ரியல் போட்டி வளையத்தினுள் போர் வீரனைப் போல் மரணமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி கேப்ரியல் போட்டியிட்ட 23 சண்டை போட்டிகளில் அவர் 13 முறை வெற்றியும் 8 முறை தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.