

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து கோழிக்கோடு நோக்கி 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், பயணத்தின் நடுவில் டயர் வெடித்திருந்ததை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. நல்லவாய்ப்பாக விமானத்தில் இருந்த 160 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடு நோக்கி 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், வியாழக்கிழமை காலை கொச்சி அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தின் தரையிறங்கும் கியர் (லேண்டிங் கியர்) பகுதியில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை கவனித்த விமானி, உடனடியாக கொச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோழிக்கோடு போக வேண்டிய விமானம், அவசரம் கருதி உடனடியாக கொச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கான சாதுர்யமான முயற்சிகளில் விமானி ஈடுபட்டார்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானம், விமான நிலைய ஓடுபாதையில் காலை 9.7 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக கொச்சி சர்வதேச விமான நிலையம் வெளியிட்ட தகவலின்படி, ஐஎக்ஸ் 398 விமானத்தின் வலது பக்க பிரதான தரையிறங்கும் சக்கரத்தின் டயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் கொச்சிக்குத் திருப்பி விடப்பட்டது. இதையடுத்து அனைத்து மீட்பு நடவடிக்கைளும் எடுக்கப்பட்ட நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு காலை 9.7 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே "விமான நிலைய நெறிமுறைகளின்படி போதுமான அனைத்து அவசரகால சேவைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால்," விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
தரையிறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விமானத்தின் வலது பக்கத்தில் உள்ள இரண்டு டயர்களும் வெடித்திருந்தது தெரியவந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேலும் விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட பிறகு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பு நடவடிக்கையாகவே விமானம் திருப்பி விடப்பட்டதாகக் கூறினார். ஜெட்டா விமான நிலையத்தின் ஓடுபாதையில் கிடந்த ஏதேனும் ஒரு வெளிப்பொருள் காரணமாகவே டயரில் இந்த சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. "விமானம் கொச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் விமானம் தரையிறக்கப்பட்ட போது அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன" என்று தெரிவித்தார்.
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையம், அவசரகால சூழ்நிலைகளின்போது செயல்படுவதற்கு சவாலானது. அந்த விமான நிலையம் ஒரு மேசை வடிவ ஓடுபாதையைக் கொண்டது, குறைந்த ஓடுபாதை நீளம் மற்றும் இரு முனைகளிலும் செங்குத்தான சரிவுகளைக் கொண்டுள்ளது. இதுபோன்ற அசாதாரண நிலைகளில் விமானம் தரையிறக்கங்களின்போது பாதுகாப்பு வரம்புகள் மிகவும் சவாலானது. இதுபோன்ற சூழ்நிலைகளில், விமானிகள் பொதுவாக கொச்சி போன்ற நீண்ட ஓடுபாதைகள் மற்றும் சிறந்த அவசரகால கையாளுதல் திறன்களைக் கொண்ட அருகிலுள்ள விமான நிலையங்களைத் தேர்வு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தரையிறங்கியதைத் தொடர்ந்து, விமான நிறுவனம் அடுத்தகட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் வரை பயணிகள் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். மாற்றுப் பயணத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாகவும், தாமதம் நீடித்தால், பயணிகள் சாலை மார்க்கமாக கோழிக்கோடு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்திருந்த நிலையில், பயணிகளில் கோழிக்கோட்டுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொச்சியில் விமான நிலைய செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.