தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருக பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெற்றது.
மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.
மாநாட்டின் இரண்டு நாள்களும் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இம்மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் வந்து கலந்துகொண்டனர்.
இதையடுத்து முத்தமிழ் முருகன் மாநாடு விழா சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா மலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார்.
தலைமைச் செயலர் முருகானந்தம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.