/

பேருந்து நிற்கவில்லை என்று பரவும் செய்தி தவறானது: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

பேருந்து நிற்கவில்லை என்று சமூக வலைதளங்களிலும் பரவும் செய்தி தவறானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

News image
அமைச்சர் சா.சி.சிவசங்கர்
Updated On :30 ஜனவரி 2025, 7:22 am

DIN

சிவகங்கை மாவட்டம், சோழபுரம், புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றது எனவும், பேருந்து நிற்கவில்லை என்று சமூக வலைதளங்களிலும் பரவும் செய்தி தவறானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

கடந்த 22 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த போது, சிவகங்கை- திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையில் சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் மகளிர் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கல்லூரி முதல்வர், முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதல்வர் உடனடியாக அந்த கல்லூரி முன்பாக பேருந்துகள் நின்று செல்ல உத்திரவிட்டார்.

முதல்வரின் உத்தரவுப்படி, என்னுடைய வழிகாட்டுதலின்படி, சிவகங்கை திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் புனித ஜஸ்டின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சாந்தா கல்வியியல் கல்லூரி முன்பாக அனைத்துப் பேருந்துகளும் ஜன.22 ஆம் தேதி முதல் நின்று செல்கின்றன.

இந்த நிலையில், ஜன 28 ஆம் தேதி சில சமூக வலைதளங்களில் முதல்வர் உத்தரவு பின்பற்றப்படவில்லை என தகவல் வெளியானது.

இதையடுத்து உடனடியாக காரைக்குடி துணை மேலாளர் (வணிகம்) பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், கல்லூரி முதல்வரிடம் சென்று பேருந்து நின்று செல்வதை உறுதி செய்தார்.

மேலும், துணை மேலாளரிடம் கல்லூரி முதல்வர், முதல்வருக்கும், தனக்கும் நன்றி தெரிவித்து பாராட்டுச்செய்தி கடிதம் வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில் பேருந்துகள் நின்று செல்கின்றன என்றும், சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பதிவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செய்வதை கண்காணித்திட தீனதயாளன் என்ற பரிசோதகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த அலுவலர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொண்டதில் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் தொடர்ந்து நின்று செல்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த கல்லூரி முன்பாக பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது என அமைச்சர் சிவசங்கரன் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.