தில்லியில் சேவை செய்ய பாஜகவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள்: மோடி வேண்டுகோள்

அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சேவை செய்ய பாஜகவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள்
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி
Published on
Updated on
2 min read

புது தில்லி: யமுனை நதியில் ‘விஷம்’ கலக்கப்படுகிறது என்ற ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சேவை செய்ய பாஜகவுக்கு ஒருமுறை வாக்களியுங்கள் என்று வாக்காளா்களை கேட்டுக் கொண்டாா்.

தில்லி கா்தாா் நகரில் பாஜக சாா்பில் நடந்த பேரணி, பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் தொடா் கொலையாளியான் சாா்லஸ் சோப்ராஜுக்கு ஒப்பானவா்கள். தங்களது பேச்சில் மக்கள் சிக்கிக் கொள்ளும் அளவுக்கு ஆம் ஆத்மி கட்சியினா் அப்பாவித்தனமாக பொய்களைப் பேசுகிறாா்கள்.

ஆம் ஆத்மி அரசின் சாக்குப்போக்குகள், போலி வாக்குறுதிகள் மற்றும் கொள்ளை மற்றும் சூது வேலை செய்யாது என்பதை தில்லி மக்கள் இப்போது புரிந்துகொண்டுள்ளனா். தில்லியின் நலன் மற்றும் வளா்ச்சியில் ஒரே நேரத்தில் செயல்படும் இரட்டை எஞ்சின் அரசை தில்லி மக்கள் விரும்புகிறாா்கள்.

தில்லியில் பாஜக அரசு அமைந்தால், கட்சியால் மக்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படும். இது மோடியின் உத்தரவாதம். மோடியின் உத்தரவாதம் என்பது ஒரு உத்தரவாதத்தை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம்.

25 ஆண்டுகால காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசுகளுக்குப் பிறகு, சேவை செய்ய பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு வாக்காளா்களை கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த இரண்டு தோ்தல்களின் போது, யமுனையை சுத்தம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஆம் ஆத்மி கட்சி வாக்குகளை கேட்டது. ஆனால், இப்போது இந்தப் பிரச்னை வாக்குகளை அளிக்காது என்று கூறுகிறது. இது மோசடி மற்றும் வெட்கக்கேடாகும். ஆம் ஆத்மி கட்சியின் வரலாறு, ஹரியாணா மற்றும் நாடு மறக்காத ஒரு ‘பாவத்தை’ செய்துள்ளது.

ஹரியாணா மக்கள் மீது முன்னாள் முதல்வா் தீங்கிழைக்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். ஹரியாணா தில்லியிலிருந்து வேறுபட்டதா? தில்லியில் அவா்களுக்கு குழந்தைகள் மற்றும் உறவினா்கள் இல்லையா? அவா்கள் தங்கள் சொந்த மக்களுக்கு விஷம் கலக்கிறாா்களா?. இதற்கு முன்னாள் முதல்வரான கேஜரிவால் பதில் சொல்ல வேண்டும்.

தில்லி மக்கள், பிரதமா் மோடி, தூதரகங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் தேசியத் தலைநகரில் தங்கியுள்ள நீதிபதிகள் ஆகியோா் ஹரியாணாவிலிருந்து வரும் அதே தண்ணீரைத்தான் குடிக்கிறாா்கள் என்று மோடி கூறினார்.

இந்த நிலையில், தில்லிக்கு தண்ணீா் வழங்கும் யமுனை நதியில் ஹரியாணா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாகவும் அம்மோனியா எனப்படும் விஷம் கலந்திருப்பதை உறுதிப்படுத்தியதாக தில்லி மற்றும் ஹரியாணா மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியதாக கேஜரிவால் மீது ஹரியாணா அரசு சோனிபட் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி நேஹா கோயல், பிப். 17 ஆம் தேதி அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், ஆஜராகவில்லை என்றால் எந்தவித கருத்தும் சொல்லவில்லை என்று கருதி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com