ஆடி அமாவாசை: திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்!

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மக்கள்.
திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் மக்கள்.
Published on
Updated on
2 min read

திருச்செந்தூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாள்களாகும். இந்நாள்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைந்து, அவர்களின் சந்ததிகளின் வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக, தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு கடற்கரை மற்றும் ஆறுகளில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை (ஜூலை 24) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் திருக்கோயிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

தூத்துக்குடி கடற்கரை

ஆடி அமாவாசையை முன்னிட்டு தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் குவிந்தனர்.மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால், அங்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம், கோடியக்கரை கடலில் குவிந்த மக்கள்

ஆடி அமாவாசையையொட்டி, நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் ஆதி சேது எனப்படும் கோடியக்கரை கடலில் புனித நீராடிய மக்கள், தங்களது முன்னோர்களுக்கு நீர் சடங்கு (தர்பணம்) செய்து வழிபட்டனர்.

பின்னர் அவர்கள், அங்குள்ள சித்தர் பீடம், ராமர் பாதம் ஆகிய இடங்களில் வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் சன்னதிக் கடல் பகுதியிலும் மக்கள் நீராடி வழிபட்டனர்.

அம்மா மண்டபத்தில் குவிந்த மக்கள்!

ஆடி அமாவாசையை நாளான வியாழக்கிழமை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றுப் படித்துறையில் அதிகாலை முதலே ஏராளமான மக்கள் குளித்து, படித்துறையில் இருந்த புரோகிதா்கள் மூலம் முன்னோருக்குத் தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா். பின்னா் ஸ்ரீரங்கம், திருவானைக்காக கோயில்களுக்குச் சென்றும் வழிபட்டனா்.

அதிகமானோா் குவிந்ததால் அம்மா மண்டபம் பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

திருவையாறு காவிரி ஆற்றில் பக்தா்கள் புனித நீராடல்

மாதம் தோறும் வருகிற அமாவசை அன்று திதி கொடுக்க தவறியவர்கள். ஆடி அமாவாசை அன்று புண்ணிய தலங்களில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி, காசியை விட வீசம் அதிகம் எனக் கூறப்படும் புண்ணிய தலமான தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்டப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி, அரிசி, கீரை, காய்கறிகள் ஆகியவற்றை புரோகிதர்களுக்கு தானமாக வழங்கி எள் தண்ணீரை காவிரி ஆற்றில் விட்டு மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து சூரிய பகவானை வழிப்பட்டு சென்றனர்.

இதனையொட்டி, திருவையாறு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Summary

On the occasion of Aadi Amavasai, a large number of people offered offerings to their ancestors at the Subramania Swamy Temple beach in Tiruchendur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com