
சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கத்தார் நாடு இயற்கை எரிவாயு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நாட்டில் நிலவும் மின்சார தட்டுப்பாடுகளை சரிசெய்ய கத்தார் நாட்டிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயு வழக்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கத்தார் நாட்டிலிருந்து ஜோர்டான் நாட்டைக் கடந்து செல்லும் பைப் லைன்கள் வழியாக சிரியாவின் டெயிர் அலி மின் நிலையத்திற்கு வழங்கப்படும் இந்த இயற்கை எரிவாயுவின் மூலம் நாளொன்றுக்கு 400 மெகா வாட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
இதன் மூலம் , சிரியா அரசினால் அந்நாட்டில் தற்போது 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படும் மின்சாரமானது 4 மணி நேரமாக உயரவுள்ளதாக சிரியாவின் இடைக்கால அரசின் மின்சாரத் துறை அமைச்சர் ஒமர் ஷாக்ரோக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஹிஜாப் விவகாரத்தில் செயலி, சிசிடிவி, டிரோன் மூலம் கண்காணிக்கும் அரசு: ஐநா அறிக்கை!
இந்த முயற்சியானது வளர்ச்சிக்கான கத்தாரின் நிதி, ஜோர்டான் நாட்டின் எரி சக்தி, கனிம வள அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டம் ஆகியவைக்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக கத்தார் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்- ஆஸாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினாலும் மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளினாலும் சிரியாவின் பொருளாதாரம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சூரிய மின்சக்தி மற்றும் ஜெனரேட்டர்கள் ஆகியவை வாங்கி பயன்படுத்தும் வசதி படைத்தோர் மட்டுமே சிரியாவின் மின்சாரம் பெறும் நிலையில் பெரும்பாலான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு சிரியாவின் கட்டமைப்புக்கு சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என ஐநா சபை தெரிவித்திருந்தது. இந்த செலவானது தற்போது 400 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.